மனதை திருடியவன் திருடன் என தெரிந்ததும் அதிர்ந்து போகும் அவள் அவனது நல்ல உள்ளத்தை புரிந்துகொண்டு அவனை திருத்த முயல்கிறாள். அவனோ அவளை விட்டு விலகுகிறான். அவன் திருந்த அவனும், அவனது கூட்டாளிகளும் இருக்கும் இடத்தை போலீசுக்கு போட்டு கொடுத்து தொழில் நடத்த முடியாதளவுக்கு எதிரியாகிறாள் அவள்.
இந்த திருடனால் கவரப்பட்ட இன்னொரு பெண் இவனின் திருட்டு தொழில் தெரிந்ததும், காதலுக்கு மூட்டை கட்டிவிட்டு திருடி பிழைப்பவனை விட உழைத்து பிழைப்பவனே மேல் என்று அவனுக்கு பாடம் புகட்டுகிறாள்.
மனம் திருந்தி உழைக்க அவன் தயாராகும் போது, அவனை போன்ற ஒரு திருடனால் காதலியின் சங்கிலி அறுபடும் போது அவள் கழுத்து அறுபட்டு இறந்துபோகிறாள். அவன் அடுத்து என்ன முடிவெடுக்கிறான் என்பது கிளைமாக்ஸ்.
ஒரு திருடன் திருந்தி மற்ற திருடர்கள் திருந்த உதவுகிறான். அதை அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் இருந்து காட்சிகளாக்கி படமாக தந்திருக்கின்றனர். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாடித்த செய்திகளை படமாக்கியிருப்பது புதுசு.
படம் முழுக்க அழுக்கு முகத்துடன் வந்து அந்தத் திருடன் பாத்திரத்தை நிற்க வைத்திருக்கிறார் அகில். அவரது பேச்சு செயல் சம்பவம் எல்லாமும் அந்த பாத்திரமாகவே தெரிகிறது. ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் நல்லா நடித்திருக்கிறார். அந்த பாம்பு கொட்டு வாங்கும் இடம் பகீர்.
அழகு முகமும், ஆசைப்படும் உள்ளமுமாக மீரா நந்தன், அவரின் எதிர்பார்ப்பும் செயலும் சல்யூட் அடிக்க வைக்கிறது. பெரிய பெரிய கண்களுடன் கனாக்கானும் தேவிகாவின் நடிப்பு பலே, அஜய், படவாகோபி, கராத்தே வெங்கடேஷன் பலர் நடித்திருக்கின்றனர். எல்லாரும் அந்த பாத்திரமாகவே தெரிகின்றனர்.
அழகப்பனின் ஒளிப்பதிவு திருட்டு இளைஞர்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இளையராஜா “என்னடா பாண்டி” பாடலில் உருக வைக்கிறார். பின்னணி இசையிலும் மிரள வைக்கிறார்.
அந்த வால்மீகி திருந்தி இராமாயணம் வர காரணமாக இருந்தார். இந்த வால்மீகி திருந்தி பல திருடர்கள் திருத்த காரணமாக இருக்கிறார். கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டு கால் கேளாக மாறும் அந்தப் பெண்ணின் நிலை, கழுத்து அறுபட்டு சாகும் கதாநாயகியின் கெதி, திருட்டு கொடுத்தவர்களின் அலறல் சத்தம் என படத்தில் வரும் சம்பவங்களைப்பார்த்து பத்து பேர் திருந்தினால் கூட இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வெற்றிதான்.
No comments:
Post a Comment