
நிறுவனம்: கேபிடல் பிலிம் ஒர்க்ஸ்
தயாரிப்பு: எஸ்.பி.சரண் இயக்கம்: ராஜ்மோகன்
இசை: யுவன்சங்கர்ராஜா
நடிப்பு: ராமகிருஷ்ணன், தனன்யா, சந்திரா, ஈஸ்வரி, தருண் சத்திரியா, நாகம்மா, ராஜீவ், சிவக்குமார், சந்திரன்,
பாடல்கள்: வாலி, கங்கைஅமரன்
நடனம்: அஜய்ராஜ், சரவணராஜன்
சண்டைப்பயிற்சி: செல்வா கலை: வித்தேஷ்
ஒளிப்பதிவு: சித்தார்த் மக்கள்தொடர்பு: ஜான்சன்
படத்தொகுப்பு: பிரவீண் கே.எல். ஸ்ரீகாந்த்:
பெற்றோர் இல்லாமல் பாட்டி துணையுடன் முட்டம் கிராமத்திற்கு வருகிறாள் துளசி. அழகிகளே இல்லைன்னு வருத்தப் படும் வாலிபர்களுக்கு பேரழகியாக காட்சயளிக்கிறாள் துளசி. இதில் குசேலன் என்கிற கூச்சான் அவள் இல்லாமல் நான் இல்லை என்று அவளை உருக உருக காதலிக்கிறான்.
அவளுக்கு ஒரு பிரச்சனை வந்த போது கூச்சானின் தாய் முன்னே வந்து உதவுவதோடு எதிரியை விரட்டியடிப்பதை கண்டு பெருமையடைகிறாள் துளசி. அப்படிப்பட்ட குடும்பத்தில் தான் மருமகளாகனும் என்று கூச்சானின் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டுகிறாள்.
காதலியின் கண் அசைவு கிடைத்தும் வானத்தில் பறக்கும் கூச்சான், காதலிப்பது தெரிந்ததும் அவனது தாய் அவளை அடித்து கிராமத்தை விட்டே துரத்தி விட்டாள் என்றதும் அதிர்ந்து போவதோடு, அவளை தேடி ஓடும் போது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்கிறான்.
காதலன் வருவான் என காத்திருந்தவள், பாட்டியின் உறவினர் வற்புறுத்த பதில் சொல்ல முடியாமல் குடிகாரனுக்கு கழுத்தை நீட்டுகிறாள்.கண் விழித்துப் பார்த்த போது காதலியின் கழுத்தில் தாலி ஏறுவதை கண்டு வெம்பி வெடிக்கிறான் கூச்சான். அவள் நல்லா வாழட்டும் என்று இவன் குடியும், தாடியுமாக வாழ்க்கை யை வெறுத்து அலெசிகிறான்.
தாலிகட்டிய கணவனை போலீஸ் கைது செய்வதை கண்டு அதிரும் துளசி அவன், திருடன், சூதாடி, குடிகாரன், கொலைகாரன் என்று தெரிய வரும் போது, தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தி அழுகிறாள். அங்கு மேலும் இருந்தால் தன்னை விபச்சாரத்துக்கு தள்ளிவிடுவார்கள் என பயந்து, அங்கிருந்து மறுபடியும் பாட்டி விட்டுக்கு வருகிறாள்.
கூலி வேலை செய்து பிழைக்கும் காதலி துளசியை கண்டு வருந்தும் கூச்சான், அவள் கணவனை சிறையிலிருந்து கொண்டு வர உதவுகிறான். சிறையிலிருந்து திரும்பும் துளசியின் கணவன் வரும் வழியில் கள்ளுக்கடையில் குடிக்கச் சென்று அங்கு மனைவியை தப்பாக பேசியவனை அடித்து துவைக்கிறான்.
காதலியின் கணவனால் செத்துப் போனவனை, நான் தான் கொலைசெய்தேன் என கூச்சான் சொல்ல, செத்துபோனவனின் உறவினர்கள், அவனை அடித்து துவைக்கின்றனர். காதலிக்காக கூச்சானும், காதலனுக்காக துளசியும் போராடும் போது இருவரின் உயிரும் ஒன்றாக பிரிகிறது.
முட்டம் பகுதியில் நடக்கும் ஒரு உண்மை சம்பவத்தை போல படம் அமைந்திருக்கிறது. திரைப்படம் பார்க்கிறோம் என்பதை மறந்து முட்டத்தில் கூச்சான், துளசி, தர்மா போன்றவர்களோ வாழ்ந்த உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
கூச்சனாக புதுமுகம் ராமகிருஷ்ணன். வெகு இயல்பாக அந்த பாத்திரமாக வாழ்ந்து நம் மனதில் இடம் பிடிக்கிறார். அதே போல துளசியின் கணவனாக வரும் தர்மாவாக நடித்திருக்கும் தருண் சத்ரியா, அடேங்கப்பா என்கிற அளவுக்கு பிரமாதப் படுத்துகிறார் அவர் கேமரா இருப்பது தெரியாமல் அப்படி எதர்த்தமாக நடித்திருப்பது அவரது திறமையை காட்டுகிறது.
துளசியாக தனண்யா. இயல்பான அந்த முகமும் கண்களும், துடிக்கும் உதடுகளும் நம் கண்முன்னே நிற்கிறது. துளசியாகவே வாழ்ந்திருக்கிறார். துளசியின் பாட்டியாக வரும் நாகம்மாவுக்கு ஓ போடலாம். நம்ம பக்கத்துவிட்டு பாட்டி போல நெஞ்சில் நிற்கிறார். அதே போல கூச்சானின் அம்மாவாக வரும் சந்திரா. கத்துவதாக இருக்கட்டும், அழுது கூச்சல் போடுவதாக இருக்கட்டும், அன்பு காட்டுவதாக இருக்கட்டும் எல்லா கிடந்தாலும் ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் ரசிகர்களிடம் அதிகம் கைதட்டல் வாங்கிச் செல்பவர் நண்பனாக நடித்திருக்கும் சிவகுமார். வசனத்திலும், நடிப்பாலும் தேர்ந்த முத்திரை. தர்மாவின் அக்கா, துளசியின் பெரியம்மா மகள் என்பவள் படத்துக்கு பலம் சேர்க்கின்றனர்.
முட்டம் கடற்கரை கிராமும், அவர்களது வாழ்க்கையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது சித்தார்த் கேமிரா. இயல்பான வாழ்க்கையை அதன் போக்கில் சொல்லியிருக்கிறார். புதியவர் ராஜ்மோகன். கதையில் வாழ்ந்து வசனத்தில் வாழ்ந்து, காட்சிகளில் நம்மையும் ஒன்றவைதது பார்க்க வைத்திருப்பது அவருது திறமை. வாழ்த்துக்கள் ராஜ்மோகன்.