காதலி ஞாபகங்களில் வாழ்வை முடிக்கும் ஒரு கவிஞன் கதை....
பாடலாசிரியர் பா. விஜய் கதாநாயக அவதார மெடுத்துள்ளார். நண்பனின் நிஜக்கதை என்ற டைட்டிலுடன் படம் துவங்குகிறது. சினிமாவில் பாட்டு எழுதும் லட்சிய வேட்கையுடன் சென்னை வருகிறார் பா. விஜய். வடநாட்டை சேர்ந்த ஸ்ரீதேவிகா வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்குகிறார். இருவரின் சந்திப்புகள் காதலை விதைக்கிறது.
ஒரு கட்டத்தில் பிரிவினைவாத கும்பலுடன் பா. விஜய்க்கு தொடர்பு இருப்பதாக கருதி போலீஸ் பிடித்து சென்று ஜெயிலில் போடுகிறது. பிறகு அவர் நிரபராதி என அறியப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.
அதற்குள் ஸ்ரீதேவிகாவுக்கும் டார்ஜிலிங்கில் வசிக்கும் வைர வியாபாரிக்கும் கட்டாயபடுத்தி திருமணம் நிச்சயம் செய்து விடுகின்றனர். புகழ் பெற்ற சினிமா பாடலாசிரியர் ஆகனும் நிறைய விருதுகள் குவிக்கனும் அதுதான் என் ஆசை என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு கணவனுடன் பறக்கிறார் ஸ்ரீதேவிகா. காதலி பிரிவில் நொறுங்கும் பா.விஜய் அவர் ஆசைப்படி படிப்படியாக உயர்ந்து முன்னணி கவிஞராகிறார். ஒரு பாடலுக்கு தேசிய விருதும் பெறுகிறார்.
டெல்லி போய் விருதை பெறும் அவர் பழைய காதலியை பார்த்து விட்டு வர டார்ஜிலிங் செல்கிறார். தொழில் நஷ்டத்தில் கணவன் தூக்கில் தொங்கி சாக சொத்துக்களை இழந்து வறுமை பிடியில் காதலி தவிப்பதை ஒருவர் சொல்ல உடைகிறார்.
ஸ்ரீதேவிகாவோ கணவர் வெளியூர் போய் இருப்பதாக பொய் சொல்லி வீட்டுக்கு வந்த பா.விஜயை உபசரிக்கிறார். அதன் பிறகு நடப்பவை மனதை உருக்கவும் பிழியவும் செய்கின்றன.
லட்சிய வெறி... காதல் வலி பாத்திரத்தில் நடிகராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் பா. விஜய். ஸ்ரீதேவிகா அழகை கவிதையில் வர்ணித்து காதல் வயப்படும் அவர் இன்னொருத்தனுக்கு அவளை நிச்சயம் செய்ததும் அழுது துடித்து பரிதாபபடவைக்கிறார்.
கணவனை இழந்து வீடும் ஜப்தியாகி சிதிலடைந்த அறையில் சாப்பாட்டுக்கே வழி இன்றி கஷ்டப்படும் காதலி நிலை கண்டு இடிந்து போகும் சீன்கள் அழுத்தமானவை... காதலி பிடி கொடுக்காமல் பேசியதால் அவர் விருப்பப்படி பெரிய கவிஞனானதை சொல்லாமல் வெளியேறுவது... டெல்லியில் தமிழ் சங்கத்தினர் நடத்தும் பாராட்டு விழாவில் காதலிக்காக எழுதிய ஞாபகம் இல்லையோ என் தோழி என்ற பாடலை பாடுவது... அந்த வழியே செல்லும் ஸ்ரீதேவிகா விழாவை ஏதேச்சையாக பார்த்து நிலை குலைவது... வீட்டுக்கு ஓடோடி வந்து பீரோவை திறக்க பா. விஜய் சொல்லாமல் வைத்து விட்டு போன விருது சான்றிதழ், செக் போன்றவைகளை பார்த்து தவிப்பது... கண்கணீல் நீர் கசிய வைக்கும் ஜீவனுள்ள பதிவுகள்...
ஸ்ரீதேவிகா அழகிலும், நடிப்பிலும் பளிச்சிடுகிறார். திருமணத்துக்கு முந்திய நாள் காதலனிடம் போய் விடிவதற்குள் என்னை முழுசாக அனுபவித்துக்கோ என்று அழுது புலம்புவது... விதவை கோலம், வறுமை வேதனைகளை மறைத்து காதலனிடம் சரளமாக பேசுவது... புகழ் பெற்ற கவிஞனான பிறகும் இன்னும் தன் ஞாபகத்திலேயே இருக்கிறான் என்ற உண்மைகளை அவன் பாடலிலும் வீட்டில் வைத்து போன விருது வகைகளிலும் கண்டு அழுது உடைவது... என நடிப்பின் உச்சம் தொட்டுள்ளார். ஆத்மார்த்தமான காதலை உயிரோட்டமான காட்சியமைப்புகளுடன் தொகுத்துள்ளார். இயக்குனர் ஜீவன். பிளாஷ்பேக்கை துண்டு துண்டாக காட்டியதால் மனதில் ஒட்டாமல் செல்கின்றன.பா.விஜய், ஸ்ரீதேவிகா இடையே காதல் மலரும் காட்சிகளையும் இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். பா. விஜய் உதவியாளராக வரும் சந்துரு, தமிழ்ச்சங்க பிரதிநிதியாக வரும் இயக்குனர் ஜீவன் பாத்திரங்களும் கச்சிதம். ஜேம்ஸ் விக் பின்னணி இசை பலமாக கை கொடுக்கிறது.
காவிய காதல்...
No comments:
Post a Comment