
பஞ்சாயத்து தலைவர் சாய்குமார் மகன்பாலாவுக்கும் போஸ்ட்மேன் தலைவாசல் விஜய் மகள் விசாகாவுக்கும் காதல். ஜாதி, அந்தஸ்தை காட்டி எதிர்க்கிறார் சாய்குமார். காதல் ஜோடியை பிரிக்க ரவுடிகள் விரட்டுகின்றனர். ரெயில்வே ஸ்டேஷனில் இருவரும் விஷம் குடிக்கின்றனர். ஒருவர் சாவதை மற்றவர் பார்க்க விரும்பாமல் எதிரெதிர் திசையில் செல்லும் ரெயில்களில் ஏறி விடுகின்றனர்.
பாலாவை மீட்டு காப்பாற்றுகிறார் தந்தை. விசாகாவை சென்னையில் டாக்டர் ஒருவர் காப்பாற்றுகிறார். இருவருமே மற்றவர் இறந்து விட்டதாக நினைத்து சோகத்தில் காலம் தள்ளுகின்றனர்.
ஒரு கட்டத்தில் பாலாவை அவர் அத்தை மகளும் விசாகாவை அவரை காப்பாற்றிய டாக்டரும் திருமணம் செய்து கொள்ள முடிவாகிறது. அப்போது பாலா உயிருடன் இருப்பது விசாகாவுக்கு தெரியவர ஊருக்கு ஓடோடி வருகிறார். அதன் பிறகு நடப்பது இதயங்களை உறைய வைக்கும் கிளைமாக்ஸ்.
பாலா-விசாகாவின் காதலில் கிராமத்து மணம். பாலத்துக்கு அடியில் காதல் செய்யும் பாலாவும், விசாகாவும் அங்கு வரும் சாய்குமாரிடம் சிக்காமல் தப்பி ஓடும் சீன்கள் பரபர.... அடியாட்கள் துரத்தலில் காதல் ஜோடி உயிர கையில் பிடித்து ஓடுவது திக்... திக்... விஷம் குடிக்கும் போது நெகிழ வைக்கிறார்கள். ஒருவரையொருவர் உயிரோடு இருக்கிறார்களா? என்று விசாரித்து கொள்ளாதது யதார்த்த பிழை.
கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார். சபேஷ்முரளி இசையில் பாடல்கள் தரம். லட்சுமிபதி ஒளிப்பதிவும் துணை நிற்கிறது.ஜீவனுள்ள காதல் கதையை அழுத்தமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் எல்.ஆர்.சுந்தரபாண்டி.
No comments:
Post a Comment