அமெரிக்காவில் வசிக்கும் சாப்ட்வேர் எஞ்சினியர் பிரசன்னா. அவருக்கு அழகான மனைவியாக சினேகா, அன்பான மகள் என மகிச்சியுடன் வாழ்கிறார்.
பிரசன்னா வேலைக்கு சென்ற பிறகு சினேகா மகளை பள்ளியில் விட்டுவிட்டு கம்பியூட்டர் கிளாசுக்கு செல்கிறார். அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் நடுவே நல்லவனாக நுழைகிறார் ஜான்ஷே. தோழியின் சிபாரிசில் அவர்கள் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வரும் ஜான்ஷே, நல்லவன் போல நடித்து அந்த வீட்டை நோட்டம் விட்டு பிரசன்னாவின் மகளை பாலியல் வன்முறை நிகழ்த்த வழி வகுக்கிறான்.
திருடன் கையில் சாவி கொடுத்தது போல பிரசன்னா வெளியூர் செல்லும் அன்று அவன் திட்டத்தை முடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் பிரசன்னா மனம் சரியில்லாததால் பயணத்தை கேன்சல் செய்தவிட்டு வீடு திரும்புகிறார். அப்போது வீட்டில் எதிர்பாரத சம்பவம் நிகழ்கிறது. அது என்ன என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.
சிறு குழந்தைகளை கடத்தி பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளியை பற்றிய கதை. அதை குடும்ப வாழ்க்கை, பாசம், பயம் என பலசவையான சம்பவங்களோடு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
அப்படி ஒரு அந்நியோன்யமான, பாசமான கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கின்றனர் பிரசன்னாவும், சினேகாவும். அவர்களுக்கிடையில் உருவாகும் தொட்டுத் தொடரும் ஊடல்களும் பட்டுப் படரும் கூடல்களும் சின்ன சின்ன கவிதைகள் போல ரசிக்க வைக்கிறது. பிரசன்னாவின் வார்த்தைகளில் தெறிக்கும் குட்டிக் குறும்புகள் ரசித்து சிரிக்க வைக்கிறது.
நல்லவனாக நடிக்கும் போது நல்லவனாகவும், கெட்டவனாக நடிக்கும்போது கெட்டவனாகவும் தெரிவது என நடிப்பில் ஜான் ஷே அசத்தியிருக்கிறார். சோகம் கலந்த அந்த சிறுமியின் நடிப்பும் பலே.
முதல் பாதியில் பாசமும் ஆசையமாக படத்தை நகர்த்தும் இயக்குநர் வைத்தியநாதன், இரண்டாம்பாதியை பயமும் பதட்டமுமாக படத்தை கொண்டு சென்று முடிக்கிறார். கடைசி இருபது நிமிட பரபரப்பு காட்சிகளில் சீட்டில் கட்டிப் போடுகிறார். பிரசன்னா, சினேகா இருவர் திறமையையும் அவர் வாங்கியிருப்பது அவரது திறமையை காட்டுகிறது.
ரெட் ஒன் கேமிரா மூலம் படத்தை எடுத்திருக்கின்றனர். படம் முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்குள் ஒத்திக்கொள்வது போல படமாக்கியிருக்கின்றனர். கார்த்திக்ராஜாவின் இசையில், "கண்ணில் தாகம்" பாடல் ரொம்பவே மனதை மயக்குகிறது.
பெற்றவர்கள் பிள்ளைகள் மீது பாசத்தை மட்டுமல்ல பாதுகாப்பையும் தரவேண்டும் என்று சொல்கிறது அசச்சமுண்டு. பொறுமையோடு பார்க்க வேண்டிய அழகான படம். அட்வைஸ் உள்ள படம்.
No comments:
Post a Comment