மிலிட்டரிகாரர் மகன் பசுபதி. கடைகளுக்கு வண்டியில் பேரல் வைத்து தண்ணீர் சப்ளை செய்பவர். அவர் மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அது தவறாக இருந்தாலும் அதை தைரியமாக செய்வார். இதனால் போலீஸ், கோர்ட் என்று செல்வதும் வாடிக்கை. பசுபதியின் பள்ளி தோழி தீபா மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டுக்கு பாரமாக இருப்பதால் அவரை கொல்ல முயற்சிக்கிறார் அவரது தந்தை. அதனால் தீபாவை தன்னோடு அழைத்து வந்து பாதுகாக்கிறார் பசுபதி.
அந்த ஊரில் தாதாவாக இருக்கும் வீராவின் தம்பி ரனிஷ், கோழி குருடாக இருந்தாலும் குழம்பு ருசியாக இருந்தால் போதும் என்று கிடைக்கிற பெண்களையெல்லாம் தனது வக்கிரங்களுக்கு பயன் படுத்துவார். அப்படி ஒரு நாள் பசுபதி அசந்த நேரம் பார்த்து மனநோயளி தீபாவை தனது காம பசிக்கு இறையாக்குகிறார் ரனிஷ். இதை அறியும் பசுபதி ஆத்திரத்தில் அவனை அடிக்க அவன் எதிர்பாரதவிதமாக செத்துபோகிறான். இதனால் கொலை பழி பசுபதி மீது விழுகிறது. அந்த கொலைப்பழியிலிருந்தும், தாதாவின் கொலைமுயற்சியிலிருந்தும் தப்பி தனது தோழியை எப்படி காப்பாற்றுகிறார், தனது காதலியை எப்படி கை பிடிக்கிறார் பசுபதி என்பது மீதி படம்.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை நகைச்சுவையுடன் வழங்கிய மூர்த்தி இந்தப் படத்தை கலகலப்புடன் கொடுத்திருக்கிறார். இதில் கிண்டலும் கேலியும், சிரிப்பும் கூத்தும் சிதறி கிடக்கிறது.
கரை படிந்த கைலி, .குறையுள்ள நடை , குதற்கமான பேச்சு என தோற்றத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார் பசுபதி. தலைநகரம் படத்தில் வடிவேலுவை பார்த்தது அடிக்கடி மயக்கம் போட்டுவிழும் ஜோதிர்மயி, இதில் பெண் போலீசாக வந்து அழுது அழுத சிரிக்க வைக்கிறார். பாடல் காட்சியில் ஆட்டம் சூப்பர். மனநலம் பாதித்த பொன்னியாக நடித்திருக்கும் தீபா நடையிலும் பேச்சிலும் வித்தியாசத்த காட்டி அந்த குறையுள்ள பெண்ணாகவே பளிச்சிடுகிறார்.
வடிவேலு வெடிவேலுவாக தியேட்டரை சிரிப்பொலியால் அதிரவைக்கிறார். ஆழம் தெரியாமல் காலை விட்டுவது போல போலீஸ்காரரின் பின்பாக்கெட்டில் கையை விட்டு அவர் படும் பாடு தியேட்டரில் அமர்க்களம். ரொம்ப நாளைக்கு பிறகு சிரிக்க வைக்கிறார் வடிவேலு. வீராவின் வில்லன் பில்டப் செம காமெடி. அதே போல ஒரு காட்சியில் வந்தாலும் பாவாலட்சுமணன், முத்துக்காளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். நீதியதியாக வரும் நிர்மலா பெரியசாமி, அவரது டவாளியாக வரும் அந்த நடிகரும் இயல்பாக நடித்திருக்கின்றனர்.
ராஜபாளையம் பகுதியை தனது கேமிராவில் அள்ளிவந்திருக்கிறார் பாலபரணி. தினாவின் இசையில் யுகபாரதி, ஏக்நாத் எழுதிய பாடல்கள் இனிமை.
திருடன் போலீஸ் விளையாட்டு. அதில் மனித நேயத்தை நேசிக்கும் காதல் என படம் ஆரம்பத்திருந்து முடிவு வரை சீரியசான விஷயத்தையும் சிரிக்க வைத்து ரசிக்க வைதது லாஜிக் பார்க்காமல் மேஜிக் காட்டியிருக்கிறார் இயக்குநர் மூர்த்தி. பசுபதி பாத்திரத்தின் மனித நேயத்திற்காக சின்ன தண்டனையாக மரக்கன்று நட்டு அதில் தண்ணீர் ஊற்ற வைப்பது சூப்பர்.
வெடிகுண்டு முருகேசன் - சிரிப்புவெடி முருகேசன்.
No comments:
Post a Comment