வறுமையின் காரணமாக மெட்ரிக்குலேசன் பள்ளியிலிருந்து அரசு பள்ளியில் சேருகிறான் மாணவன் அன்புக்கரசு. அதே பள்ளி யில் படிக்கும் வாத்தியார் மகன் ஜீவா தன் பின்னே நான்கு பசங்களை வைத்துக்கொண்டு சக மாணவர்களை தனக்கு கீழே அதிகாரம் செய்கிறான். இதற்கு அன்புக்கரசு மறுக்கிறான். இதனால் முதல் நாளே மோதல் ஏற்படுகிறது.
ஜீவாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அன்புக்கரசுவுக்கு உதவுகின்றனர். ஜீவா மாட்டிவிடும் போதெல்லாம் அன்புக்கரசு நல்லவனாகிறான். இதனால் ஜீவாவை எதிர்த்து லீடராகவும் உயர்கிறான். தனது லீடர் பதவி பறிபோய் தனக்கு அதிகாரமும் போய்விட்டதால் குமுறும் ஜீவா, இன்னும் மோதல் வன்மத்துடன் பழி வாங்க அலைகிறான்.
இருவரும் கோஷ்டி சேர்த்து சண்டை போடுகின்றனர். இவர்கள் பகை பெற்றோர் மத்தியிலும் மோதலை உண் டாக்குகிறது. இன்னொரு புறம் கிஷோர் சித்தப்பாவும், ஜீவா அக்காளும் காதல் வயப்படுகின்றனர். வீட்டுக்கு தெரியாமல் தனிமை யில் சந்தித்து காதல் வளர்க்கிறார்கள். இதை இரு சிறுவர்களும் நேரில் பார்த்து விடுகின்றனர். இந்த சம்பவம் வீட்டுக்கு தெரிகிறது. இதனால் காதலர்கள் கதி என்னவாகிறது. சிறுவர்கள் மோதல் என்ன பலனை உருவாக்குகிறது. பெரியவர்கள் என்ன மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
சிறுவர்கள் பற்றிய கதையை அவர்களின் யதார்த்த உணர்வுகளுடன் குடும்பம், காதல், காமெடி, சென்டிமென்ட் போன்ற அம்சங்களை கலந்து கச்சிதமாக செதுக்கி படமாக்கி உள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். மாணவர்கள் வெற்றிபெற அதிகாரம் பெற அதற்கு சரியான போட்டி படிப்புதான் என்றும் படித்தால் பதவியும் அதிகாரமும் தேடிவரும் என நினைக்க வைக்கிற காட்சிகள் நகைச்சுவையாக இருந்தாலும் அது இயக்குநரின் திறமையை, எண்ணத்தை மதிக்கவைக்கிற காட்சிகள். அதே போல அன்புக்கரசு ஐ.ஏ.எஸ். என்று தனது பெயருடன் லட்சிய படிப்பை இணைத்து பள்ளியில் சேரும் அன்பு, பிறகு இதர மாணவர்களையும் ஜீவா. சி.எம். என அதே லட்சிய சிந்தனைக்கு மாற்றி அப்துல் கலாமின் கனவை அருமையாக பதிவு செய்தமைக்கு ஆயிரம் பாராட்டுக்கள். கணவன் - மனைவி சண்டை பிள்ளைகளை எப்படி பாதிக்கறது என்பதையும், லட்சியமே இல்லாமல் இருப்பவர்களை சொந்த வீடு வாங்க வேண்டும் என்று சிறுவர்கள் தூண்டுகிற காட்சியும் சூப்பர்.
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்பது போல, மாணவர்கள் மோதலை தடுத்து நிறுத்த தேசிய கீதத்தை ஒலிபரப்பி ஆசியிரியருக்கே பாடம் சொல்லும் மாணவியின் செயல் ராயல் சலியூட் போட வைக்கிறது. இறையாண்மை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் இறையாண்மையை மதிக்கும் மக்களின் உணர்வுகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அந்த காட்சி உணர்த்துகிறது.
ஒருவர் கூட பார்த்த முகங்கள் இல்லை. ஆனால் பக்கத்து வீட்டில் பார்த்த மனிதர்களாக நெஞ்சில் இறங்குகிறார்கள். அப்படி புதுமுகங்களை அந்த பாத்திரமாகவே வாழவைத்த இயக்குநர் பாண்டிராஜூக்கு ஒரு ராயல் சல்யூட். அன்புக்கரசுவாக கிஷோர். அவனது கோபமும் வேகமும் மன உறுதியும அந்த பாத்திரமாகவே ஒன்றிப்போக வைக்கிறது. ஜீவாவாக நடித்திருக்கும் ஸ்ரீராம் வியக்க வைக்கும் நடிப்பை வாங்கியிருக்கிறான்.
எங்க அப்பா தான் வாத்தியார் என மிடுக்குடன் குமுறும் ஜீவா, அப்பாவிடம் அன்புவை மாட்டிவிடுவதும் பதிலுக்கு அன்பு நன்னடத்தையை வாத்தியார் புகழ்வதும் திருப்பம்.
கருநாக்கு காரன் சாபம் போட்டால் அன்புக்கரசு அழிஞ்சு போவான். ஆத்தாளுக்கு காசு வெட்டி போட்டா ஆளே போயிடுவான். என்ற இளசுகளின் சதித் திட்டங்கள் அழகான பதிவு.
இப்ப பாரேன் பல்லை கடிப்பான், இப்ப பாரேன் கையை முறுக்கி அடிப்பான் என்று ஜீவாவை உசுப்பேற்றும் பக்கடா, தோள் மேல கை போட்டா குள்ளமாயிடுவேன் என தடுக்கும் குள்ளமணி, கிஷோருக்கு வரிந்து பேசும் மங்களம், தேசியகீதம் பாட்டு போட்டு சிறுவர்கள் சண்டையை நிறுத்தும் மனோண்மனி, தந்தையுடன் சண்டை போடும் வாத்தி யாரை ஓடிப் போய் வயிற்றில் பிஞ்சுகை யால் குத்தும் குழந்தை புஜ்ஜிமா, என அனைத்து பாத்திரங்களும் நெஞ்சுக்குள் ஊடுருவி நிற்கின்றன.
விமல், வேகாவின் செல் போன் காதல் நல்ல அழகான கவிதை. வேகா வெள்ளைச் சிரிப்பில் மனசுகளை கொள்ளை யடிக்கிறார்.
சொக்கலிங்க வாத்தியாராக வரும் ஜெயபிரகாஷ் நெஞ்சில் நிற்கிறார்.வெள்ளைச் சாமியாக வரும் சிவகுமார் அடடே போட வைக்கிறார். சுஜாதா யதார்த்த நடிப்பு அருமை. செந்தில்குமாரி எதிர் வீட்டில் பார்த்த பெண்மணி போலவே பளிச்சிடுகிறார் பலே.
சிறுவர்களுக்கு எதிர்காலத்தையும் பெரியவர்களுக்கு கடந்த காலத்தையும் நினைத்து பார்க்க வைக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். படம் முழுக்க ஒவ்வொருகாட்சியையும் விரசமில்லாமல், அதே சமயம் தொய்வில்லாம் படு ஜாலியாக அனுபவிக்க வைக்கிறார். திறமையான இயக்குநர்களை கை தூக்கிவிடும் ரசிகர்கள் இவரையும் வாழ்த்தி வரவேற்பார்கள்
ஜேம்ஸ் வசந்தன், இசையில் பாடல்கள் நெஞ்சை அள்ளுகின்றன. பின்னனி இசையும் பிரமாதம். சேசிங் காட்சிகளில் அது பளிச்சிடுகிறது.
சுப்பிரமணியுபரம் படத்தை யதார்த்தமாக தயாரித்து வழங்கி தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மாநிலங்கள் சென்று பாராட்டுக்களை பெற்று வந்த சசிகுமார், இந்தப் படத்தை துணிச்சலுடன் தயாரித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தரமான படங்களை வரவேற்கும் ரசிகர்கள் இந்த படத்தையும் வெற்றியடைய வைப்பார்கள். ஜாலியானவுங்க மட்டுமல்ல நல்லதை சொல்லும் பசங்க...
No comments:
Post a Comment