
சஞ்சய், ராம் இருவரும் உயிருக்குயிரான நண்பர்களாக பழகுகின்றனர். குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறார் விஜய்பாபு. அங்கு ராம் வெறியாக மாறி சஞ்சய்யை கொல்லத்துணிகிறார். போலீஸ் பிடிக்கிறது. நண்பனை கொல்ல முயன்றது தனக்கே தெரியாமல் குழம்புகிறார் ராம். இதற்கிடையில் மேலும் இரு கொலைகளை அவரே செய்து இருப்பது தெரிய அதிர்ச்சி.
நண்பனுக்கு மனநிலை பாதித்திருப்பதாக கருதி ராமை அழைத்துக்கொண்டு பூசாரியை பார்க்க கிளம்புகிறார் சஞ்சய். வழியில் திரும்பவும் ராமுக்கு வெறி பிடிக்கிறது. சஞ்சய்யை கொல்ல துரத்துகிறார். ஏன் கொல்ல துடிக்கிறார் என்பது பிளாஷ்பேக்... சஞ்சய் பிழைத்தாரா? என்பது கிளைமாக்ஸ்...
சஞ்சய்யை அடித்து போடும் ரவுடிகளை ஆவேசமாக தாக்கி அறிமுகமாகிறார் ராம். கம்பெனிக்கு அடுத்த எம்.டி. ராம் என விஜய்பாபு அறிவித்ததும் நண்பர்கள் மோதுவார்களோ என்ற எதிர்பார்ப்பு எகிற அடுத்த நிமிடமே இதுதான் சரியான தேர்வு என சஞ்சய் சந்தோஷப்படுவதன் மூலம் நட்பு அழுத்தமாய் பதிகிறது.
ராம் திடீர் புத்திபேதலிப்புக்கு ஆளாகி இரண்டு பேரை கொடூரமாக கொல்லும் காட்சிகள் திகிலூட்டுகின்றன. மலை குகைக்குள் ராம், சஞ்சய் நுழைந்ததும் விபரீதம் நடக்கப்போகிறது என்ற உதறல்...
பிளாஷ்பேக்கில் தேஜாஸ்ரீயை செம்பாங்கி என்று காதல் ரசம் சொட்ட அழைத்தப்படி சப்பாணியாக நடந்து வரும் ராம் நடிப்பில் அசத்துகிறார். தனக்காக விபத்தில் காலை இழக்கும் சிறு வயது ராம் மீது தேஜாஸ்ரீக்கு காதல் வருவதும் ஜீவன்.
போலீஸ் அதிகாரியாக வரும் லிவிங்ஸ்டன் விறைப்பு. மகாநதி சங்கர் கலகலப்பூட்டுகிறார். போன ஜென்மத்து ஞாபகம் அவ்வப்போது வருவதும் அந்த ஜென்மத்தில் காதலியை கொன்றவர்களை இந்த ஜென்மத்தில் கொன்று பழி தீர்ப்பதுமான காட்சிகளை இயக்குனர் தர்மலிங்கா விறு விறுப்பாக நகர்த்தினாலும் லாஜிக்கில் சொதப்பல். முத்து ராஜா இசையில் "ஓ பிரம்மதேவா" பாடல் இனிமை.
No comments:
Post a Comment