Friday, November 13, 2009

மோ‌தி‌ வி‌ளை‌யா‌டு


கோடீஸ்வரர் கலாபவன் மணியின் ஒரே மகன் வினய். வளர்ப்பு மகன் யுவா. இருவரும் பண செழிப்பில் ஹைடெக் செக்யூரிட்டிகள் பாதுகாப்புடன் பார்ட்டி கொண்டாட்டம் என திரிகின்றனர்.
கல்லூரி மாணவி காஜல் அகர்வாலால் வினய் சொகுசு கார் விபத்தாகிறது. காருக்கு ஏற்பட்ட ரூ.3 லட்சம் இழப்பை சரிகட்ட காஜலை சில நாட்கள் தன் வீட்டில் வேலை செய்ய வைக்கிறார். அப்போது இருவரும் காதல் வயப்படுகின்றனர். யுவாவும் காஜலை விரும்புகிறார்.
கலாபவன் மணியின் தொழில் எதிரிகள் வினய்யை தீர்த்துக்கட்ட ரவுடிகளை ஏவுகின்றனர். அவர்கள் சுடும்போது குண்டு தவறி யுவா மேல் பாய்ந்து பலியாகிறார்.
வினய்யை கொல்ல ரவுடிகள் துரத்துகின்றனர். அப்போது வினய் வசதி வாய்ப்புகள் திடீரென்று பிடுங்கப்படுகிறது.
அதிர்ச்சியாகும் வினய் தந்தையிடம் காரணம் கேட்க அவர் யுவா தான் என் மகன் எதிரிகளை ஏமாற்ற அனாதை விடுதியில் இருந்து உன்னை எடுத்து மகனாக வளர்த்து நாடகம் நடத்தினேன் என்கிறார். நீ சாகும் நாள் தான் எனக்கு சந்தோஷம் என வெறுப்பு கொட்டுகிறார்.
நிர்க்கதியாகும் வினய்க்கு காதலி காஜல் ஆதரவாகிறார். அவர் யோசனைப்படி தந்தையுடனும் கொலைகார கும்பலிடமும் மோதுவது கிளைமாக்ஸ்...
பணக்கார இளைஞன் கேரக்டரில் கச்சிதமாய் பொருந்துகிறார் வினய்...காஜல் அகர்வாலை எடுபிடி வேலை செய்ய வைத்து ரசிப்பது ரசனை. வினய்யை கொல்ல கொலைகாரன் வரவழைக்கப்பட்டதும் விறுவிறுப்பு. தன்னை அனாதை என்று தந்தை சொல்வது அதிர்ச்சி திருப்பம். ஒரே நாளில் ஆடம்பர வாழ்க்கையை இழந்து தெருவுக்கு வந்து பரிதாபப்பட வைக்கிறார்.
காஜல் அகர்வால் துறுதுறுவென அழகாய் பளிச்சிடுகிறார். கோடீஸ்வரர் மகனாக இருந்தும் அந்தஸ்தை அனுபவிக்காமல் சாகும் யுவா பாவம்.
சந்தானம், வி.எம்.சி. ஹனீபா, மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர்.
காட்சிகளில் ஸ்டைலும் விறுவிறுப்பும் ஏற்றி கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் சரண். பாதிக்கு பின் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறிய கதையை தந்தை மகன் மோதலுக்கு உள்ளேயே சுழற்றி இருப்பது வேகத்தடை... ஹரிகரன்-லெஸ்லி இசையில் வித்தியாசம். கருண் ஒளிப்பதிவு பிரமாண்ட படுத்துகிறது.

1 comment:

  1. hello... hapi blogging... have a nice day! just visiting here....

    ReplyDelete