
நிறுவனம்: தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு: ராதா
நடிப்பு: அனுஷ்கா, மனோரம்மா,சாயாஜி ஷிண்டே , சோனு சூட், சுபாஷினி
இயக்கம்:கோடி ராமகிருஷ்ணா வசனம்: பி.ரவிசங்கர்
இசை: கோட்டி பாடல்கள்: வாலி
ஒளிப்பதிவு: கே.செந்தில்குமார் மக்கள்தொடர்பு மவுனம்ரவி
சிறுவயதிலிருந்தே சென்னையில் வசிக்கும் அருந்ததி தனது திருமணத்திற்காக மூததையர் பிறந்த ஊரான கந்தவர்கோட்டைக்கு வருகிறாள். அங்கு அவளுக்கு எதிர் பாராத சில சம்பவங்கள் நடக்கிறது. அதனால் அந்த வீட்டின் பெரிய மனுஷியாக இருக்கும் மனோரமாவிடம் பழைய கந்தர்வகோட்டை சமஸ்தானத்தின் கதையை கேட்கிறாள்.
சமஸ்தானத்தின் மருமகன் பசுபதி, காம கொடூரனாக அலைகிறான். சமஸ்தானத்தின் மூத்த மகளை திருமணம் முடித்த பின்னும் குடி, கூத்து, கொடூரமான முறையில் பெண்களை அனுபவித்து, சித்ரவதை செய்து கொள்கிறான்.
தன்னால்தான் பசுபதி கொட்டம் நீடிக்கிறது, என்று புரிந்து கொள்ளும் மூத்த மகள் தன்னைத் தானே மாய்த்து கொள்கிறாள். வெகுண்டெழும் இளையமகள் அருந்ததி, பசுபதியை அடித்து நொறுக்கி, அவன் வலம் வரும் குதிரைக் காலில் கட்டி காட்டுக்குள் துரத்துகிறான். உயிர் பிழைக்கும் பசுபதி, தவமிருந்து அகோரி சாமியாராக வீராவேசத்தோடு மறுபடி பழிவாங்க வருகிறான். அப்போதும் வென்று உயிரை எடுக்கப் போகும் அருந்ததியை வேதாந்திகள் வேண்டாமென்று தடுக்கின்றனர்.
இவன் இறந்த பின்னும் உன்னை பழிவாங்காமல் விடமாட்டான். அதனால் இவன் பிரேத ஆத்மா வெளியே வரமுடியாத அளவு சமாதி கட்ட வேண்டுமென்று சொல்கின்றனர். அதன்படியே செய்கிறாள் அருந்ததி. மூன்றாவது தலைமுறையில் பேத்தியாக பிறந்திருக்கும் இந்த அருந்ததியை பழிவாங்க துடிக்கும் பசுபதியின் ஆவி சமாதியை உடைத்துக் கொண்டு வெளிவருகிறது. அருந்ததியை பழிவாங்க அலைகிறது. அதிலிருந்து எப்படி அருந்ததி ஜெயிக்கிறாள் என்பது படம்.
இரண்டு தலைமுறை அருந்ததிகளில், ஒருத்தி மனிதன் பசுபதியோடும், இன்னொருத்தி ஆவி பசுபதியின் ஆவியுடனும் சண்டையிடவது கதை. பிரமாண்ட செட், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ், போராடிக்காத கதை, அனுஷ்காவின் ஆர்ப்பாட்டமான நடிப்பு, சோனு சூட்டின் ருத்ர தாண்டவன், ஆச்சி மனோராமாவின் அனுபவ பங்களிப்பு, சாயாஜி ஷிண்டேவின் அட்டகாசமான பாத்திரப்படைப்பு. என அருந்ததி ஜொலிக்கிறாள்.
சோனு சூட்டின் அம்மா பாத்திரத்தில் நடித்திருப்பவர் பார்க்கும் போதே நடுங்க வைக்கிறார். ''பொம்மாயி, பொம்மாயி'' என்று திரையில் குரலில் ஒலிக்கையில் திகிலடிக்கிறது. சின்ன வயது அருந்ததியின் ஆக்ரோஷ முக பாவனைகள் ஆஹா! ஆஹா!. ஆச்சி கதையின் முதுகெலும்பாக தாங்கி நிற்கிறார். அவரது வார்த்தைகள் மூலமாக கதை விவரிக்கப்படுவது அழகு.
பழைய மாளிகையும் புது மாளிகையும் வேறு வேறாக காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது. படம் நெடுகுவே கிராபிக்ஸ் வந்தாலும் உறுத்தாமல் இருக்கிறது.
அகோரி சாமியர்கள் பற்றிய காட்சிகள் திக்.. திக்.. திருவிழா. டிரம் டான்ஸ் புருவங்களை உயர வைக்கிறது. அனுஷ்கா, அருந்ததியாவும், ஜக்கம்மாகவும் மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
அம்மன் படத்தை தந்த கோடிராமகிருஷ்ணா மறுபடியும் ஒரு வெற்றிப்படத்தை தந்திருக்கிறார். அருந்ததீயின் திரையோடு கட்டிப்போடும் அட்டகாசமான படம்.
No comments:
Post a Comment