
நிறுவனம்:கே.ஆர்.ஜி. மூவிஸ் இன்டர்நேஷனல்
தயாரிப்பு: கே.ஆர்.ஜி இயக்கம்: செல்வா
இசை: ஸ்ரீகாந்த்தேவா வசனம்: எல்.வெங்கடேஷன்
நட்சத்திரங்கள்: மாதவன், மம்தா மோகன்தாஸ், அப்பாஸ், விவேக், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, ராஜா, சோனா, ரேணுகா, ஆர்த்தி, பூவிலங்கு மோகன்
பாடல்கள்: பழனிபாரதி, கபிலன், பா.விஜய்
நடனம்: ஸ்ரீதர், கல்யான், ஈஸ்வர்பாபு
சண்டைப்பயிற்சி:தளபதி தினேஷ் கலை: சிவாயாதவ் ஒளிப்பதிவு:யு.கே.செந்தில்குமார்.படத்தொகுப்பு: வி.டி.விஜயன்
மக்கள்தொடர்பு: மெளனம் ரவி
தயாரிப்பு நிர்வாகம்: டி.வி.சசி, ஜெயசீலன்
கிருஷ்ணா(அப்பாஸ்)பெரும் பணக்காரர் மகளை மணந்தவர். அவரது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் குரு(மாதவன்). அவருக்கு இதே போன்ற நிறுவனத்தில் "பாஸ்" ஆக வேண்டும் என்பது கனவு. கிருஷ்ணா பெண் பித்தர். அழகான பெணகளை கண்டால் அவர்கள் மீது அவருக்கு ஆசை வந்துவிடும். மனைவிக்கு தெரியாமல் தனது பண பலத்தால் அவர்களோடு அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வார்.
இந்த சூழ்நிலையில் அழகான பெண்ணான சீமா (மம்தாமோகன்தாஸ்) ஒரு சந்தர்ப்பத்தில் குருவுடன் மோதுகிறார். இந்த மோதல் பிறகு நட்பாக மாறுகிறது. சீமா போல ஒரு துணை கிடைத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறான் குரு. சீமாவுக்கு பணக்காரி ஆக வேண்டும் எண்பது கனவு.
சீமா, கிருஷ்ணாவின் பார்வையில் சிக்குகிறார். அவளை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் கிருஷ்ணா, அவளை அழைத்து வந்து தன்னிடம் சேர்க்கும் பணியை குருவிடம் ஒப்படைக்கிறார். அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தால் இதே போன்றதொரு நிறுவனத்திற்கு பாஸ் ஆக்கி விடுவதாக உறுதி அளிக்கிறார் கிருஷ்ணா.
காதலிக்கப்படுபவளா, பாஸ் வாய்ப்பா என்று யோசிக்கும் குரு, பிறகு அவளும் பணக்காரியாக வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறாள் என முடிவெடுத்து இருவருக்கும் சந்திப்பை எற்படுத்துகிறார். இருவரும் ஒன்றாக ஒரு இடத்திற்கு செல்லும் போது கிருஷ்ணாவின் மனைவி சிவ பூஜையில் கரடி மாதிரி நுழைந்தது தடுத்துவிடுகிறார். இதனால் தான் தப்பிக்க குருவின் மனைவிதான் சீமா என்று பொய் சொல்லி தப்பிக்கிறார் கிருஷ்ணா.
அதிலிருந்து சீமா, குரு இருவரையும் ஒன்றாக பார்க்க ஆசைப்படுகிறார் கிருஷ்ணாவின் மனைவி. சந்தர்ப்பம் பெரும்பாலும் அப்படியே அமைவதால் கிருஷ்ணாவால் சீமாவை தொட முடியாமல் போகிறது. மனதுக்குள் சீமாவை காதலிப்பதால் கிருஷ்ணாவை தொடவிடாமல் இது மாதிரி சந்தர்ப்பத்தை எற்படுத்துகிறான் குரு. முடிவில் எப்படி இருவரும் சேர்கிறார்கள். இவர்களின் கொள்கை என்னவாகிறது என்பது மீதி படம். அதை முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வா.
குரு பாத்திரத்தில் விளையாண்டிருக்கிறார் மாதவன். படம் முழுக்க அவர் காட்டும் நகைச்சுவை நடிப்பு செம கலாட்டா. அதே போல அப்பாஸ். அவர் மம்தாவை தனியாக சந்திக்க போராடும் காட்சிகள் கலகல. அழகு பதுமையாக வருகிறார் மம்தா. பாடல் காட்சிகளில் மனதை கொள்ளை கொள்கிறார். நடிப்பிலும் ஜமாய்க்கிறார்.
படத்தின் இன்னொரு கதாநாயகன் போல விவேக். அவர் பெண் வேடம் போட்டுக்கொண்டு எம்.எஸ்.பாஸ்கருடன் அடிக்கும் லூட்டியில் தியேட்டர் அதிர்கிறது. எம்.எஸ்.பாஸ்கரும் "சிவாஜி" ரஜினி கெட்டப்பில் வந்து ஆடுகிற காட்சியிலும், சிவாஜி போல விவேக்கை பார்த்து மயங்குகிற காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். சின்ன வசனமா இருந்தாலும் அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார் மயில்சாமி. சோனா, ரேணுகா என பலர் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் இனிமை. ஒவ்வொரு பிரேமையும் கண்களில் ஒத்திக்கொள்வது போல பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஜாலியாக படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர் செல்வா.
குரு என் ஆளு கலகலப்பான படம்.
No comments:
Post a Comment